ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2வது நாளாக சோதனை.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்... வெளியான தகவல்

By Thanalakshmi VFirst Published Jun 8, 2022, 10:43 AM IST
Highlights

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
 

சென்னை வடபழனியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆர்த்தி ஸ்கேன் மையம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் 45 கிளைகளை கொண்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் பல்வேறு இடங்களில் புதிய கிளைகளை திறந்த நிலையில், முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஆர்த்தி ஸ்கேன் செண்டர் உரிமையாளருக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை, திருச்சி , மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சோதனையானது, சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் அண்ணாநகரில் உள்ள நிறுவனத்தின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அதில் பணியாற்றும் டாக்டர்களின் வீடுகள், கோவில்பட்டியில் உள்ள நிறுவனர் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 

இதில் கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவ கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த நிலையில், ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். 

இன்றுன் தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. பிரபலமாக தனியார் ஸ்கேன் செண்டரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க: சிதம்பர கோவில் விவகாரம்..முரண்டு பிடிக்கும் தீட்சிதர்கள்..திருப்பி அடிக்க தயாராகும் தமிழக அரசு? நடந்தது என்ன ?

click me!