சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று புதிதாக நிறுவப்பட்ட தங்க கொடி மரத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 5 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் .
புதிய கொடிமரம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து புதிய கொடி மரம் உருவாக்கப்பட்டு அதில் 9 கிலோ 161 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் பதிக்கப்பட்டது.
இந்த கொடி மரத்தில் 300 கிலோ தாமிரமும், 17 கிலோ வெள்ளியும் சேர்க்கப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் நேற்று புதிய கொடி மர பிரதிஷ்டை நடைபெற்றது.
பகல் 11.50 மணி முதல் 1.40 மணிக்கு இடையேயான சுப முகூர்த்தத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த நிலையில் தங்க கொடி மரம் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் பிற்பகல் 2.40 மணி அளவில் கொடி மரத்தின் சதுரவடிவ பீடத்தின் மீது மாம் நபர்கள் பாதரசத்தை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் புதிய கொடி மரம் சேதமடைந்தது.
கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது தங்க கொடி மரத்தை 5 பேர் சேதப்படுத்துவது போன்ற காட்சி பதிவாகி இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
கொடி மரத்தை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒரு முதியவர் உள்பட 5 பேரை பிடித்த கோவில் நிர்வாகத்தினர் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.