
கோயம்புத்தூர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற விதிப்படி பயிற்சி பெற்று பணிநியமனம் செய்யப்படாமல் இருக்கும் 206 பேரை நியமனம் செய்தால் மக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கும் உயரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியது.
“தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இன்னும் குறையாததால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு டெங்கு காய்ச்சலை தடுக்க எந்தவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதில், டெங்கு காய்ச்சலால் கடந்த இரண்டு மாதத்தில் ஏற்பட்ட உயிர் பலி எவ்வளவு? தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முழு விபரங்கள் இருக்க வேண்டும்.
நிலவேம்பு கசாயத்தால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே நிலவேம்பு கசாயம் குறித்த சர்ச்சை தேவையற்றது.
டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற குரல் முதலில் ஓங்கி ஒலித்ததுடன், அதற்கான சட்டம் இயற்றிய மாநிலம் தமிழகம்தான். அதன்படி 206 பேருக்கு ஆகம விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டும், இதுவரை பணிநியமனம் செய்யப்படாததால் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தச் சட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவந்ததால் அதை நிறைவேற்ற வேண்டியது இல்லை என்று கருதாமல் உடனடி நடவடிக்கை எடுத்து, இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதால் மக்களிடம் மிகப்பெரிய நன்மதிப்பை பெற முடியும். அத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கும் உயர வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அனைத்து அரசு கட்டிடங்களின் உறுதித் தன்மையை கண்டறிய ஒரு ஆய்வு குழு அமைக்க வேண்டும்.
நடிகர் விஜய் நடத்து வெளியான மெர்சல் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் படத்தில் அரசுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அந்த படம் தணிக்கை துறைக்கு சென்று தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியாகி உள்ளது.
எனவே, பா.ஜனதா நிர்வாகிகள் மெர்சல் படத்துக்கு எதிராக போராடாமல் தணிக்கை துறைக்கு எதிராகதான் போராட வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் பெற்று அரசியல் பணிகளை செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.