தண்ணீர் திறந்தால் கரை உடையும் ஆபத்து; 25 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு - எச்சரிக்கும் விவசாயிகள்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 20, 2018, 1:27 PM IST
Highlights

கரூரில் பல வருடங்களாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் அணைகளில் இருந்து முழு கொள்ளளவு திறந்துவிடப்பட்டால் 25 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 

கரூரில் பல வருடங்களாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் அணைகளில் இருந்து முழு கொள்ளளவு திறந்துவிடப்பட்டால் 25 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் மாயனூரில் இருந்து பிரிந்துச் செல்லும் முக்கியப் பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் பல வருடங்களாக தூர்வாரப்படவில்லை. இவற்றில் பல வாய்க்கால்களில் மணல் நிரம்பி இருப்பதால் அதன் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்லவில்லை. 

அதன்படி மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்துச் செல்லும் நான்கு வாய்க்கால்கள் மூலம் கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருக்கும் 80 ஆயிரத்து 762 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. 

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மாயனூர் கதவணையிலில் இந்து நேற்று மட்டும் இரண்டு இலட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. 

அதன்படி, விநாடிக்கு 927 கன அடி நீர் வெளியேற்றும் கொள்ளளவு கொண்ட தென்கரை வாய்க்காலில்  800 கன அடி தண்ணீரும், 1080 கன அடி நீர் வெளியேற்றக் கூடிய புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து 400 கன அடி தண்னீரும், 411 கன அடி நீர் வெளியேற்றும் கொள்ளளவு கொண்ட பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி தண்ணீரும், 45 கன அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 10 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு குறைவாக தண்ணீர் திறப்பதால், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. அப்பகுதி விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்க முடியாமல் திணறி வருகின்றனர். நடு மற்றும் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் போய் சேரவில்லை. 

அதேபோன்று பழையக் கட்டளை மேட்டு வாய்க்காலில், நச்சலூர் மதகைத் தாண்டி தண்ணீர் செல்லவில்லை. இதேபோல், புதியக் கட்டளை மேட்டு வாய்க்காலில் செல்லும் தண்ணீர் பெட்டவாய்த் தலையைக் கடந்துச் செல்லவில்லை. 

கொள்ளளவு நீர் திறந்தால் கரை உடையும் அபாயம் இருப்பதால் வாய்க்காலில் குறைந்தளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் கடைமடைப் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் கதறுகின்றனர்.

click me!