தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதில் இலங்கை கடற்படைக்கு தொடர்பு இருந்தால் இந்தியா கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமட மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு கடலுக்குள் சென்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகுகளின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் தங்கச்சிமட மீனவர் பிரிட்ஜோ என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் உடன் சென்ற மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ராமேசுவரம் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இறந்த மீனவர் பிரிட்ஜோ உடலில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டை எடுத்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
அதன் முடிவு தெரிந்ததும் இலங்கை கடற்படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாக இந்தியா நடவடிக்கை எடுக்கும்.
மீத்தேன், ஷேல் எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது.
மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.