மனைவியை தன்னுடன் சேர்த்துவைக்க கோரி ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து கணவன் குதிக்க முயற்சி...

First Published Apr 24, 2018, 8:40 AM IST
Highlights
husband trying to jump from the Collector office floor to along his wife along with him ...


திண்டுக்கல்

மனைவியை தன்னுடம் சேர்த்து வைக்கக்கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து குதிக்க முயன்ற கணவனை காவலாளர்கள் கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐயலூர் அருகே உள்ள வளவிசெட்டிபட்டியைச் சேர்ந்த முருகேசன் (40) என்பவர் தனது மனைவி தங்கம் (35), மகன்கள் மதியழகன் (10), ஜெயராஜ் (8) ஆகியோருடன் மனு கொடுக்க வந்தார். 

ஆனால், ஆட்சியர் அலுவலகத்திற்குள் தங்கம் அழுதுகொண்டே வந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலாளர்கள் அவரிடம் விசாரணை  மேற்கொண்டனர். அதில், "தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், 8 கிலோ மீட்டர் நடத்தியே அழைத்து வந்ததாகவும்" தெரிவித்தார். 

இதனையடுத்து, காவலாளர்கள் முருகேசனிடம் விசாரித்தபோது அவர் காவலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர், அவர் காவலாளர்களிடம், "அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை அபகரித்து கொண்டார். அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க வேண்டும" என்றார். 

ஆனால், முருகேசனுடன் அவருடைய மனைவி வர மறுத்து குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து, முருகேசனை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு காவலாளர்கள் அனுப்பி வைத்தனர். அங்கிருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் மனு கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்தார். 

பின்னர், மீண்டும் முருகேசன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மனைவி, குழந்தைகள் இல்லாததை பார்த்த அவர் திடீரென ஆட்சியர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் தேசிய கொடி கம்பத்தின் அருகே இருந்த தடுப்பு சுவரில் ஏறி நின்றுகொண்டு கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக சத்தம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த காவலாளர்கள் மாடிக்கு ஓடினர். பின்னர் நைசாக அவருடைய காலை பிடித்து தடுப்பு சுவரில் இறக்கி கீழே கொண்டுவந்து விசாரித்தனர். அப்போது, "தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்" என்று கூறினார். 

இதனையடுத்து, தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவரை கைது செய்த காவலாளர்கள் தாடிக்கொம்பு காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.

click me!