
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, போதகாப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவரது மனைவி பிரியா (20). ராஜேஸ் நாமகிரிப்பேட்டையில் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேசுக்கும் பிரியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை பிரியா, வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்துள்ளனர். பிரியாவின் உடலைப் பார்த்து கதறிய தாய் ரங்கம்மாள், மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தல் புகார் செய்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியாவின் கணவன் ரஜேசையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.