திருச்சி
திருச்சியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கொட்டும் இடத்தில் பெரிய துணிப் பையில் மண்டையோடுகள், கை, கால் எலும்புகள் கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நரபலி கொடுக்கப்பட்டு பின்னர் இங்கு போடப்பட்டதா? என்று காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், கே.கே.நகர், சுப்ரமணியநகரில் மாநகராட்சி குடிநீர் ஏற்றும் நிலையம் உள்ளது. அதனருகில் குப்பைக் கொட்டும் இடமொன்று உள்ளது. நேற்று காலை நீர் ஏற்றும் நிலையத்திற்கு வந்த ஊழியர்கள் குப்பைக் கொட்டும் இடத்தைக் கடந்தபோது அங்கு ஒரு பெரிய துணிப் பை இருப்பதைக் கண்டனர்.
அந்தப் பைக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், நான்கு மனித மண்டையோடுகள், கை, கால்களில் எலும்புகள் இருந்ததால் பதறிப்போய் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியது. அந்தப் பகுதியில் மக்கள் சூழ்ந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள் மண்டையோடுகளை பார்த்தனர். அதில், மண்டையோட்டின் நெற்றில் பொட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதனால், மண்டையோடுகள் வைத்து பூசை செய்யப்பட்டதா? என்று சந்தேகித்தனர்.
குப்பைக் கொட்டும் இடத்தில் இவற்றை வைத்ததால் குப்பை அகற்ற வாகனங்களில் வருபவர்கள் இதனை எடுத்துக் கொண்டு போய்விடுவர் என்ற எண்ணத்தில் இங்கே போட்டிருக்கலாம் என்று யூகித்தனர்.
செய்வினை, பில்லி, சூனியம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டதா? அல்லது நரபலி கொடுக்கப்பட்ட பின்னர் மண்டையோடுகள் இங்கு வீசப்பட்டுள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். குப்பை கொட்டும் இடத்தில் கிடந்த மண்டையோடுகள் மற்றும் எலும்புகளை காவலாளர்கள் எடுத்துச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
குப்பைக் கொட்டும் இடத்தில் மண்டையோடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் கிடந்ததால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.