
கோயம்புத்தூர்
கல்லாறு – பர்லியாறு இடையே ஊட்டி மலைப் பாதையில் உருண்டு விழுந்த பாறை மீது கார் மோதியதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம், கல்லாறு, பர்லியாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் கல்லாறு – பர்லியாறு இடையே மலைப் பாதையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு மலைப்பாதையில் விழுந்து கிடந்தன.
இந்நிலையில் திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் செல்போன் உரிமையாளர் கடை வைத்து இருக்கும் வேலுமணி (34) என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் காரில் ஊட்டிக்கு வந்தார்.
ஊட்டியில் பல இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் ஊருக்கு திரும்பினார். காரை வேலுமணி ஓட்டினார். காலை 7.30 மணியளவில் கல்லாறு – பர்லியாறு இடையே 2-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் கிடந்த பாறை மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவலாளர்கள், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு அவசரஊர்தி மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் – ஊட்டி பிரதான சாலையில் காலை 7.30 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோத்தகிரி வழியாக வானங்கள் திருப்பி விடப்பட்டன.
பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், உதவிப்பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்பார்வையில் 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த பாறைகள் அகற்றப்பட்டன.