
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வழக்கமாக ஏப்ரல் முதல் மே மாதம் வரை கோடை காலம் நிலவும். சில சமயங்களில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களிலேயே லேசான மழைப்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு, காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக போதிய மழையின்றி கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. வழக்கத்திற்கு மாறாக நிலவிய வெப்ப அலைகளால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், இன்று ஊட்டியில் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்த இந்த மழையினால் வெப்பம் தணிந்து, ஊட்டிக்கே உரித்தான இதமான குளிர்ந்த காலநிலை திரும்பியுள்ளது. இதனால் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க மலைப்பிரதேசத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், வறட்சியால் வாடிய உள்ளூர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நிலவும் இந்த குளுமையான சூழலை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அனுபவித்து வருகின்றனர்.