
இன்று தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த 10 நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஒரு வாரம் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது..
கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் நேற்று காலை முதலே வானில் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. வேப்பேரி, புரசைவாக்கம், அடையார், தரமணி, திருவான்மியூர், மேற்கு மாம்பலம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, புழுதிவாக்கம், கொடுங்கையூர், பெரம்பூர் உள்பட பல இடங்களில் மீண்டும் லேசான மழை பெய்தது.
இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது என்றும் இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததது..
அதன்படி, இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் , 12-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 14-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.