திண்டுக்கல்
மலேசியாவில் கொத்தடிமையாக வேலை செய்யும் மகனை மீட்டுத்தர வேண்டும் என்று பெற்றோர், இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு மனு அனுப்பி கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டி ஜமீன் தெருவைச் சேர்ந்த வரதராஜன், அவருடைய மனைவி சுப்புலட்சுமி.
இவர்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.
அந்த மனுவில், " எங்களுடைய மகன் காந்தி (45). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் சலோம் என்னுமிடத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றார்.
அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காந்தியின் இரண்டு கைகள் மற்றும் பற்கள் சேதமடைந்ததால் அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அதனால், அவர் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கும்படி நிறுவன உரிமையாளரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர் காந்தியின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை வைத்துக்கொண்டு வேறு தொழிலாளி வேலைக்கு வந்த பின்னர்தான் உன்னை அனுப்புவேன் என்று கூறி வருகிறார்.
எனவே, அந்த நிறுவனத்தில் கொத்தடிமையாக வேலைசெய்யும் எனது மகனை மீட்டுத்தர வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.