வீட்டில் தனியாக இருந்த பாட்டி கழுத்தை அறுத்து கொலை; நகைக்காக திருடர்கள் வெறிச்செயல்...

First Published Aug 10, 2018, 7:37 AM IST
Highlights

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொன்று திருடர்கள் நகையை பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 
 

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகேவுள்ளது பொட்டிரெட்டிபட்டி. இங்குள்ள கங்கானித் தெருவில் வசித்தவர் சண்முகம் (லேட்). இவரது மனைவி அமராவது (71). இவர்களுக்கு சேகம், சுப்ரமணி, ஞானபிரகாசம் என மூன்று மகன்களும், ராஜேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். அமராவதி தனது இரண்டாவது மகன் மற்றும் மகளோடு ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். 

அமராவதியின் இரண்டாவது மகன் தனியார் கல்லூரி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். மகள் கூலி தொழில் செய்கிறார். நேற்று காலை மகன், மகள் இருவரும் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் அமராவதி மட்டும் தனியாக இருந்தார்.

மகன் மற்றும் மகள் வேலை முடிந்து மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டுக்குள் அமராவதி கழுத்து அறுபட்டு மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டுக் கிடந்தார். இதனைக் கண்ட பிள்ளைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். கதறி அழுதனர். 

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலாளார்கள், இறந்து கிடந்த அமராவதியை பார்த்தனர். அப்போது அவரின் காது அறுக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர். 

இதுகுறித்து பிள்ளைகளிடம் விசாரித்தபோது  அமராவதியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினையும், காதை அறுத்து முக்கால் சவரன் தோட்டையும் காணவில்லை என்று கூறினர். நகையை  பறித்த திருடர்கள் தான் அமராவதியை கொன்றுள்ளனர் என்று காவலாளர்கள் கண்டுபிடித்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிந்த எருமப்பட்டி காவலாளர்கள் அமராவதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், காவல் உதவி ஆய்வாளர் மாதையன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு தடவியல் நிபுணர்களை வரவழைத்து திருடர்கள் எதாவது தடயம் விட்டுச் சென்றுள்ளனரா என்று சோதித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த பாட்டியிடம் காதை அறுத்து தோடையும் பறித்தும், கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு செயினையும் பறித்துக் கொண்டு திருடர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். 

வீட்டில் தனியாக இருந்த பாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொன்று திருடர்கள் நகையை பறித்துக் கொண்டுச்சென்ற சம்பவம் அக்கம்பக்கத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

click me!