சாதி பெயர் சொல்லி திட்டுறாங்க..கழிவறை கழுவ சொல்றாங்க..கதறி அழுத மாணவிகள்.

By Thanalakshmi VFirst Published Dec 18, 2021, 9:03 PM IST
Highlights

திருப்பூரில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களை அவர்களது சாதிப்பெயரை சொல்லி தரகுறைவாக பேசியதாகவும், பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி இழிவாக நடத்தியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தைச் சேர்ந்த கீதா என்பவர், கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். கோரோனா பாதிப்பின் காரணமாக சுழற்சி முறையில் பள்ளிகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் மாணவிகள் தலைமை ஆசிரியர் கீதா மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இதனிடையே தலைமை ஆசிரியர் கீதா, மாணவ, மாணவிகளைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷுக்கு மாணவ - மாணவியர் புகார் அளித்தனர். தொடர்ந்து, சாதிப் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதாகவும், பள்ளியில் உள்ள கழிப்பறையை ஆதிதிராவிடர் குழந்தைகளை வைத்துக் கழுவ வைத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும், புகார் தொடர்பாகப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் கீதாவிடமும் விசாரணை நடத்தினார். இதுக்குறித்து மாணவிகளிடம் கேட்டபோது, நாய் என திட்டுகிறார் என்றும்,  சாதியை வைத்து தரக்குறைவாக பேசுகிறார் என்றும் கழிவறை சுத்தம் செய்ய சொல்கிறார் என்றெல்லாம் மாணவர்கள்  கண்ணீர் மல்க குமுறியிருக்கின்றனர். முதலில் புகார்களை மறுத்த தலைமை ஆசிரியை கீதா, பின்னர் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இனி இதுபோன்று நடக்காது என்றும் அவர் முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  

இதனிடையே, விசாரணை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ரமேஷ் கூறுகையில், ''தலைமை ஆசிரியர் கீதா மீது வந்த புகாரின் அடிப்படையில், பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியது, ஆதிதிராவிடர் குழந்தைகளைக் கழிப்பறையைக் கழுவ வைத்த புகார் அடிப்படையில், தலைமை ஆசிரியர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்யச்சொல்லியதாகவும்,  சாதி பெயரைக் குறிப்பிட்டு இழிவாக பேசியதாகவும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!