வீணாகும் உணவுப் பொருள்களைக் கொண்டு எரிவாயு தயாரிப்பு; மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு...

First Published Nov 21, 2017, 8:48 AM IST
Highlights
Gas production with waste products Congratulations to the students of Medical College ...


திருவாரூர்

திருவாரூரில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது விடுதியில், வீணாகும் உணவுப் பொருள்களைக் கொண்டு எரிவாயு உற்பத்தி செய்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். மாணவர்களின் இந்த செயலால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் வீணாகும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தி உயிரிவாயு (பயோகேஸ்) கிடங்கின் மூலம் எரிவாயு பெற திட்டமிட்டனர்.

இதனையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் உத்தரவின்பேரில் இதற்கான பணிகள் ஒரு மாதத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதன்படி 7 அடி விட்டம், 5 அடி ஆழம் கொண்ட தொட்டியில் மாட்டுச் சாணத்தை இரண்டு மடங்கு நீரில் கரைத்து 15 நாள்கள் மூடி வைக்கப்பட்டது.

இதில் 15 நாள்களுக்குப் பிறகு பல்வேறு வேதியியல் வினைகள் காரணமாக மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் போன்ற வாயுக்கள் கலவையால் ஹைட்ரஜன் உயிரிவாயு உற்பத்தி ஆனது.

இதன் பின்னர், அந்தக் குழியில் போடப்பட்ட வீணான உணவுப் பொருள்கள், அழுகும் மரக்கழிவுகள், இலை, தாவரங்கள் போன்றவற்றின் மூலம் உயிரிவாயு பெறப்பட்டு, ஒரு குழாய் மூலம் மாணவர் விடுதியில் உள்ள சமையல் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டு நேற்று முதல் எரிவாயுவாக பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறியது :

"இந்த மாற்று எரிசக்தி மூலம் மாதத்திற்கு நான்கு எரிவாயு சிலிண்டர் மீதமாகிறது. உணவுக் கழிவுகள் உபயோகமாக எரிவாயு உருவாக உபயோகமாக இருப்பது மட்டுமல்லாது அவற்றை அகற்றுவதற்கான செலவும் இல்லை.

மேலும், இந்த யோசனையை தெரிவித்த மாணவர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருதும் பெற்றுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

click me!