
கரூர்
தடையை மீறி கரூரில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்திய பத்து பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் யாரேனும் சேவல் சண்டை நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே குறிக்காரன்வலசு என்ற இடத்தில் சிலர் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்துவதாக காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் அரவக்குறிச்சி காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சேவல் சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேரை அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (35), கிருஷ்ணராயபுரம் மணி (40) ஆகியோரும் அடங்கும்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஐந்து சேவல்கள், இரண்டு இருசக்கர வாகனங்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்தியதை கண்டிக்கும் வகையில் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.