உருவானது கஜா புயல்... வெளுத்து வாங்க போகும் கனமழை..! தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 10:51 AM IST
Highlights

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. வங்க கடலில் உருவான புயலுக்கு 'கஜா' என பெயரிடப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. வங்க கடலில் உருவான புயலுக்கு 'கஜா' என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தும் வந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஓட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தான் வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு 'கஜா' என பெயரிடப்பட்டுள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் 'கஜா' புயல் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே வரும் 15-ம் தேதி புயல் கரையை கடக்கிறது. 

மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் சென்னையில் வடகிழக்கில் 990 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் வரும் 14-ம் தேதி மாலை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

வரும் 15-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கஜா புயல் உருவானதை அடுத்து வரும் 15-ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

click me!