அரியலூர்
இலவச எரிவாயு இணைப்பு கொடுத்து அரியலூர் மாவட்டத்தில் புகை இல்லா கிராமங்களை உருவாக்கப்படும் என்று தஞ்சை மண்டல விற்பனை உதவி மேலாளர் சுனில் பத்துலா தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்துக்கு தஞ்சை மண்டல விற்பனை உதவி மேலாளர் சுனில் பத்துலா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: "இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்பில் வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் "உஜ்வாலா தினம்" கொண்டாடப்பட உள்ளது.
உஜ்வாலா திட்டம் மூலம் பாதுகாப்பான மற்றும் நீடித்த எரிவாயு பயன்பாட்டை கிராம மக்களிடம் எடுத்துக்கூறி புகை இல்லாத கிராமங்களை அமைக்க உள்ளோம்.
அரியலூர் மாவட்டத்தில், அயன்தத்தனூர், குழுமூர், நமங்குணம், காட்டாத்தூர், வெட்டியார்வெட்டு, காட்டகரம், இளையபெருமாள்நல்லூர், பொட்டவெளி, சென்னிவனம் ஆகிய ஒன்பது கிராமங்கள் முதல் கட்டமாக புகை இல்லா கிராமமாக மாற்றப்படும்.
உஜ்வாலா திட்டம் தொடர்பாக வருகிற 20-ஆம் தேதி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் மேற்கண்ட கிராமங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
இதே போல கள்ளங்குறிச்சி, வானதிராயன்பட்டினம், கூவத்தூர், செந்துறை, இடங்கன்னி, அண்ணிமங்கலம், பெரியதிருக்கோணம், மணகெதி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு இலவச எரிவாயு இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்துக்கு இப்ராகிம் முன்னிலை வகித்தார். அனுராதாபார்த் சாரதி வரவேற்றுப் பேசினார். இதில் பாரத்பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.