குரங்கனி காட்டுத் தீ….  5 பெண்கள் உயிரிழந்ததாக தகவல் !!

First Published Mar 12, 2018, 6:20 AM IST
Highlights
fire in kurangani hills near body forest


போடியை அடுத்த குரங்கனி மலைப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 5 பெண்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன,

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப் பகுதியில் ‘டாப் ஸ்டேசன்’ என்ற இடம் உள்ளது.இது, சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி . இயற்கை எழில்கொஞ்சும் இந்த வனப்பகுதி சிறந்த கோடை வாசஸ்தலம். இங்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது. குரங்கணி வரை மட்டுமே, வாகனங்களில் செல்ல முடியும்.

அதன்பின்னர் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்தே செல்ல வேண்டும். இங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. திரும்பி பார்க்கும் திசை எல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும்.

குரங்கணி வனப்பகுதியில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் மலையேற்றம் பயிற்சியிலும் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில் சென்னை வேளச்சேரி, வடபழனி பகுதிகளைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் குரங்கணிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள். பின்னர் அவர்கள் நேற்று மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இதில் 3 பேருக்கு மலையில் ஏறமுடியவில்லை. இதனால் அவர்கள் கீழே இறங்கி விட்டனர். மீதமுள்ள 27 பேர் கொண்ட குழுவினர் மலையேறிக்கொண்டிருந்தனர்.

இதேபோல் திருப்பூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினரும் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இதில் 6 ஆண்கள், தலா 3 பெண்கள் மற்றும் குழந்தைகள் கொழுக்குமலை வனப்பகுதிக்கு சென்ற இவர்கள், மலை அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென குரங்கணியில் இருந்து மேல் நோக்கி தீப்பற்றி எரியத்தொடங்கியது. காற்றின் வேகம் அதிகரித்ததால் சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது.

கொழுந்து விட்டு எரிந்த தீ சுற்றுலா பயணிகளை சூழ்ந்து கொண்டது. உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக ‘அய்யோ, அம்மா’ என்று அலறியபடி நாலாபுறமும் அவர்கள் சிதறி ஓடினர். பள்ளத்தாக்கு பகுதியில் உருண்டு விழுந்தனர். சில பயணிகள், என்ன செய்வது என்று தெரியாமல் அலறினர். அவர்களது சத்தம் கேட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போடியில் இருந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதேபோல் குரங்கணி கிராம மக்களும் அங்கு விரைந்து சென்றனர். நேரம் செல்லச் செல்ல தீயின் வேகம் அதிகரித்து கொண்டே இருந்தது. பல மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் என 30-க்கும் மேற்பட்ட குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக விமானப்படை உதவியை மாவட்ட நிர்வாகம் அணுகியது.இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் போடி வனப்பகுதிக்கு வந்தது. ஆனால் வனப்பகுதியை சுற்றிலும் தீ எரிந்து கொண்டிருந்ததால், சம்பவ இடத்தை தெரிந்து கொள்ள முடியாமல் வட்டமடித்தபடியே இருந்தது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

 காட்டுத்தீயில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டனர். இதில் திருப்பூரைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேரும், சென்னையைச் சேர்ந்த 4 பெண்களும் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  காட்டுத்தீயில் சிக்கி 5 பெண்கள் உயிரிழந்ததாகவும் பலர் தீக்காயம் அடைந்துள்ளதாகவும்,  தீயில் சிக்கி தவிக்கும் மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!