திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியில் வல்லூர் அனல் மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடாக, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இங்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல்மின் நிலையம் சார்பில் 3 அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தலா அலகில் 500 யூனிட் என தினமும் 1500 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டருக்கு ஆயில் கொண்டு செல்லும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதனை யாரும் கவனிக்கவில்லை.
இந்நிலையில், ஜெனரேட்டர் பைப்லைனில் இருந்து, ஆயில் வெளியேறிது. இதில், திடீரென இன்று காலை தீப்பொறி விழுந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வல்லூர் அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், திருவொற்றியூர் அனல் மின்நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தீயை அணைக்க முடியவில்லை. இதனால், 3வது அலகு முழுவதுமாக எரிந்து நாசமானது.
ஏற்கனவே 2 மற்றும் 3வது அலகு மட்டும் செயல்பட்டு வந்தது. முதல் அலகு பழுதாகி இருந்து, தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நாளை காலை முதல் அலகு சோதனை முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 2வது அலகு மட்டும் தற்போது செயல்படுகிறது. இதனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அதனை சுற்றியுள்ள அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், எண்ணூர் உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்தந்த பகுதிகளுக்கு டாக்டர்களை கொண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 4 நாட்களில் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ், புரைசைவாக்கம் சிட்டிமால் என வணிக வளாக கட்டிடங்கள் தீக்கு இறையானது. இதைதொடர்ந்து வல்லூர் அனல்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.