தொடரும் கந்துவட்டி புகார்! தேனியில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி!

First Published Oct 24, 2017, 2:33 PM IST
Highlights
FInance Complaint to continue


கந்துவட்டி கொடுமையால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் தாய், மகன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு குடும்பமே தீக்குளித்ததற்குப் பிறகு கந்துவட்டி கொடுமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கந்துவட்டி கொடுமையை தடுக்க வேண்டும் என்ற கருத்து உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கந்துவட்டி தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

ஈரோட்டில் கடனை அடைக்க முடியாத காரணத்தால் கணவரின் கிட்னியை வலுக்கட்டாயமாக பெறும் முயற்சியை தடுக்கக்கோரி, மனைவி புகார் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து அவரின் கணவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கந்துவட்டி கொடுமையால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தாய் சரஸ்வதி, மகன் ஜெகதீசன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள், பாண்டி என்பவரிடம் கடன் பெற்று திருச்சி செலுத்தியும் கூடுதல் பணம் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் பெற்ற விவகாரத்தில் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வராததால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

click me!