காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தனது கார் ஓட்டுநரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த வழக்கில் தந்தை மற்றும் மகனை காவலாளர்கள் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் நாராயணமூர்த்தி (60). கடந்த சனிக்கிழமை அவரது வீட்டருகே தன்னிடம் வேலைபார்த்த கார் ஓட்டுநர் முருகனை (38) கொலை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து காவலாளர்கள் விசாரணை நடத்திய பிறகு தெரிவித்தது:
“நாராயணமூர்த்திக்கு அடியாளாக முருகன் இருந்ததும், நாராயணமூர்த்தி செய்யும் தவறுகளுக்கு முருகன் உடந்தையாக இருந்துள்ளார். இதன் காரணமாக முருகனுக்கு ரொக்கமும், நிலமும் தருவதாகவும் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
இதையடுத்து தன்னிடம் தருவதாகக் கூறிய பணத்தையும், நிலத்தையும் தருமாறு கேட்டு நாராயணமூர்த்திக்கு முருகன் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த நாராயணமூர்த்தி சனிக்கிழமை இரவு முருகனை வீட்டுக்கு வருமாறும், அப்போது பேசிக் கொள்ளலாம் எனவும் கூறி வரவழைத்துள்ளார்.
அங்கு மிளகாய்த் தூளைத்தூவி, கொலை செய்துவிட்டு, தானும், தனது மகனும் இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளர் லாமேக் வழக்குப் பதிந்து விசாரணைக்காக நாராயணமூர்த்தி, அவரது மகள், இரண்டு மகன்களை காவல் நிலையத்தில் வைத்து இரண்டு நாள்களாக விசாரணை நடத்தினார்.
அதில், நாராயணமூர்த்தி, அவரது மகன் ராஜபத்மன் ஆகியோர் மீது குற்றம் நீருபிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட சிறையில் வைக்கப்பட்டனர்.