மருமகனை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற மாமனார்; மகளை அடித்ததால் கோபத்தில் வெறிச்செயல்...

First Published Jun 13, 2018, 9:08 AM IST
Highlights
Father-in-law killed his son-in-law for beating her daughter


கோயம்புத்தூர்
 
கோயம்புத்தூரில் மகளை அடித்த மருமகனை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற மாமனார் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி எப்.சி.ஐ. கிடங்கு சாலையைச் சேர்ந்தவர் தியாகராஜன் (62), பெயிண்டரான இவருடைய மனைவி கோமதி. இவர்களது மகள் சாரதா (28). இவருடைய கணவர் குணவேல் (32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2½ வயதில் அஸ்வந்த் என்ற மகன் உள்ளான்.

பெங்களூருவில் தங்கியிருந்து பணியாற்றிய குணவேல் அடிக்கடி கோயம்புத்தூர் வந்து தனது மனைவி மற்றும் மகனை பார்த்துச் செல்வது வழக்கம். இதனால் தியாகராஜன் தனது மகளை கணபதி காவலர் குடியிருப்பில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குணவேல் கோயம்புத்தூர் வந்தார். அப்போது கணவன் – மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதில் குணவேல் தனது மனைவியை அடித்துவிட்டாராம். இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு சாரதா தனது மகனுடன் தந்தை வீட்டிற்கு சென்றார். இதனால் குணவேல் மீது தியாகராஜன் கடும் கோபத்தில் இருந்தார்.

இதனிடையே, குணவேல் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருப்பதாக கடந்த 10–ஆம்  தேதி தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரிடம் தனது மகளை அடித்தது தொடர்பாக கேட்பதற்காக தியாகராஜன் இரவு 9 மணியளவில் அங்கு சென்றார். 

அப்போது மருமகனுக்கும் தியாகராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தியாகராஜன், குணவேலை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தியாகராஜன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவலாளர்கள் வழக்குப்பதிந்து தலைமறைவான தியாகராஜனை வலைவீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில் கோவை 2–வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தியாகராஜன் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து தியாகராஜனை காவலாளர்கள் சிறையில் அடைத்தனர்.


 

click me!