
திருவள்ளூர்
திருவள்ளூரில் போலீஸ் போல நடித்து பெண்ணிடம் இருந்து 12 சவரன் நகையை கொள்ள்ளையடித்த சென்ற மர்ம நபர்களை ஒரிஜினல் போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய சந்தைத் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ஷியாமளா (64). இவர்களுக்கு ஷாருமதி என்ற மகள் உள்ளார்.
புருஷோத்தமன் இறந்துவிட்டதால் ஷியாமளா திருத்தணியில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகள் ஷாருமதி சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஷியாமளா நேற்று முன்தினம் திருத்தணியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.5000-தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தார்.
திருத்தணி காந்திசிலை அருகே வரும்போது மர்ம நபர்கள் மூன்று பேர் அவரிடம் தங்களை காவலாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அதன்பின்னர் அவர்கள் ஷியாமளாவிடம் திருத்தணியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. எனவே, நீங்கள் அணிந்துள்ள நகைகளை கழற்றி பையில் போட்டு எடுத்துச் செல்லுங்கள். அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
அவர்கள் பேச்சை நம்பிய ஷியாமளா, தான் அணிந்திருந்த 12 சவரன் நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அதனை வாங்கிய அந்த மர்மநபர்கள் நகைகளை ஒரு பையில் போடுவதுபோல நடித்து, நகைகளை திருடிக் கொண்டு வெறும் பையை சுற்றி அதை ஷியாமளாவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.
வீட்டுக்குச் சென்ற ஷியாமளா பையை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. காவலாளர்கள் என்று கூறியவர்கள் திருடி சென்றது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவலாளர்கள் வழக்குப்பதிந்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியாக காட்சிகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.