பேஸ்புக்கில் ஏற்பட்ட காதலால், கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற காதலன், அவரை தீ வைத்து எரித்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இளம்பெண் உயிர் தப்பினார்.
கடந்த 1ம் தேதி காலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகேஉள்ள முந்திரி தோப்பில் ஒரு இளம்பெண் உடல் முழுவதும் தீப்பற்றி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அங்கு சென்று, தீயில் இருந்து அந்த பெண்ணை மீட்டனர்.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல், காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். ஆனால், இளம்பெண் சுயநினைவு இல்லாமல் இருந்ததால், அவர் யார்…? எந்த ஊரை சேர்ந்தவர்..? என தெரியவில்லை. இதனால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து இன்று அதிகாலையில், இளம்பெண்ணுக்கு நினைவு திரும்பியது. இதையடுத்து போலீசார், அவரிடம் விசாரித்தனர்.
சரண்யாவுக்கும், சேலத்தை சேர்ந்த லாரி டிரைவர் முரளி என்பவருக்கும் இடையே ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அப்போது முரளி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை இளம்பெண் சரண்யா நம்பினார். இதையடுத்து கடந்த 28ம் தேதி சென்னை சென்ற முரளி, சரண்யாவை காரில் அழைத்து சென்றார். மதுரை, தஞ்சாவூர் உள்பட பல ஊர்களுக்கு 2 பேரும் சென்றுள்ளனர். பின்னர் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முரளி கூறியுள்ளார்.
ஆனால், திடீரென்று பண்ருட்டிக்கு காரில் அழைத்து சென்ற அவர், அங்கு சாலையோர கோவிலில் வைத்துசரண்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து முரளி, வாழ்க்கை நடத்த போதிய பணம் இல்லை. மேலும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் வருத்தப்படுவார்கள். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார். அதற்கு, சரண்யாவும் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு முந்திரி காட்டுக்கு சென்றனர். அப்போது முரளி முதலில் நீ இறந்து விடு. என்னை ஏற்கனவே ஒரு பெண் காதலித்து ஏமாற்றி விட்டாள். அவளை கொலை செய்துவிட்டு, இதே இடத்துக்கு வந்து நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றார்.
இப்படி பேசி கொண்டிருக்கும்போதே, திடீரென கையில் இருந்த கேனை திறந்து டீசலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் சரண்யா அலறி துடித்ததும், அங்கிருந்து காரில் தப்பிவிட்டார். அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு காப்பாற்றிவிட்டனர் என தெரிவந்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து, சரண்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு அவர்கள் சென்றதும், தீயில் வெந்து கிடந்த மகளை பார்த்து கதறி அழுதனர்.
இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று, ஏமாற்றி திருமணம் செய்து தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற முரளியை வலைவீசி தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.