ஆம்.. ரத்த கொதிப்பு தான்! சபாநாயகர் அப்பாவுவின் கிண்டலுக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த இபிஎஸ்!

Published : Oct 15, 2025, 07:34 PM IST
Tamilnadu

சுருக்கம்

கரூர் சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக சட்டப்பேரவையில் கருப்பு பட்டை அணிந்த அதிமுகவினரை சபாநாயகர், திமுகவினர் கிண்டலடித்தனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை கிண்டலடித்த சபாநாயகர் அப்பாவு, 'கையில் எதற்கு கருப்பு பட்டை. ரத்த அழுத்தமா' என கிண்டல் செய்தார். இதேபோல் அமைச்சர் ரகுபதியும் அதிமுகவினர் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்ததை கிண்டல் செய்தார்.

வெட்டி வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில், கருப்பு பட்டை அணிந்ததை கிண்டல் செய்த அப்பாவு மற்றும் திமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார்.

சபாநாயகர், அமைச்சர் பின்னால் ஒளிந்தது ஏன்?

இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். திரு.ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?

எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள்?

"எத்தனைக் காவலர்கள் கரூர் த.வெ.க. கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்?" என்ற கேள்விக்கு கூட, உங்களின் பதிலுக்கும், உங்கள் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதில் அளிக்க முடியாத நீங்கள், #KarurTragedy-யை எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள் என்பதை தமிழக மக்கள் இன்று உணர்ந்திருப்பர்.

கிண்டலாக பேசிய சபாநாயகர்

கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் சொல்லொண்ணா வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் கருப்பு பட்டை அணிந்தால், அதையும் கிண்டல் செய்யும் தொனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும், மிகக் கேவலமாகப் பேசினர்.

கருப்பு பட்டை கண்டால் சிறை ஞாபகம்

"ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?" என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது. 16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார்.

கருப்பு பட்டை அணிந்தது ஏன்?

இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான். ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே... அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம்.

உண்மை சுடும் ஸ்டாலின் அவர்களே...

திரு. ஸ்டாலின் அவர்களே- இன்று நீங்கள் ஒரு முதல்வராக பொறுப்போடு பேசுவீர்கள் என்று எண்ணினேன். ஆனால் நீங்களோ, உங்கள் கருர் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் Version 2.0 போல பேசியுள்ளீர்கள். உண்மை சுடும் என்பதை மட்டும் நினைவிற்கொள்க'' என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்