சாராயம் காய்ச்சி விற்ற எட்டு பேர் சிறையில் அடைப்பு; 500 லிட்டர் சாராயம் அழிப்பு...

First Published Feb 26, 2018, 9:27 AM IST
Highlights
Eight people arrested for selling liquor 500 liters liquor demoliish...


சேலம்

சேலத்தில் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்றுவந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 500 லிட்டர் சாராயம் காவலாளர்களால் அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், குருவம்பட்டி வனப்பகுதியில் சமீபகாலமாக சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வந்தது. சாராயம் காய்ச்ச வரும் மர்ம நபர்களால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடனும் இருந்து வந்தனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மாநகர காவல் ஆணையர் சங்கருக்கு புகார் கொடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சூரமங்கலம் காவலாளர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்பேரில் நேற்று உதவி காவல் ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் அருண்குமார், கேசவன் மற்றும் 30 காவலாளர்கள் அந்த வனப்பகுதிக்கு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் அங்கு சாராயம் ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவலாளர்கள் சாராய ஊறல்களை அழித்ததுடன், ஏழு பேரல்களில் இருந்த 500 லிட்டர் சாராயத்தையும் அழித்தனர்.

மேலும், இது தொடர்பாக எட்டு பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள், கருப்பூர் அருகே உள்ள வட்டகாடு மஞ்சையான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45), கோவிந்தராஜ் (38), வெங்கடேஷ் (36), அவருடைய தம்பி கணேசன் (30), மகாராஜன் (50), அவருடைய மகன் சதீஸ் (26), தேவராஜன் (44), பெரியசாமி (42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததை உறுதி செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் எட்டு பேர் மீதும் காவலாளர்கள் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

click me!