
திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாகச் சாடினார். "பொய் வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி திமுக ஆட்சியைப் பிடித்தது" என்று அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், தற்போது தமிழகத்தில் நடப்பது 'கொள்ளையடிக்கும் கூட்டம்' என்றும் அவர் விமர்சித்தார். இந்த மக்கள் விரோத ஆட்சியை விரட்டி அடிக்கவே அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாக ஈபிஎஸ் சூளுரைத்தார். நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் அவதிப்படுவதாகவும், இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் பேசினார்.