அரியலூர்
அரியலூரில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைக்கு வரும் குடிகாரர்கள், அருகில் உள்ள தேவாலயம் மற்றும் கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு தொந்தரவு கொடுப்பதால், அப்பகுதி மக்கள் சாராயக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகில் உள்ளது அடைக்கலபுரம். இங்கு, கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் வெள்ளை விநாயகர் கோயில் உள்ளன.
இந்த தேவாலயத்தின் அருகில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று இயங்கி வருகிறது. சாராயக் கடைக்கு வரும் குடிகாரர்களால் தேவாலயத்திற்கு வருபவர்களும், கோயிலுக்கு வருபவர்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
அதுமட்டுமின்றி, பாசனவாய்க்கால்கள், ஓடைகளில் சாராய பாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட்டுகளையும் குடிகாரர்களால் வீசி செல்வதால் அங்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இங்கிருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அடைக்கலபுரம்,செம்பியக்குடி, குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் டாஸ்மாக் சாராயக் கடை அருகே நேற்று போராட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.
"பதினைந்து நாள்களுக்குள் கடையை அகற்றாவிட்டால் மக்களை ஒன்று திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்தப்படும்" என்று அவர் எச்சரித்தார்.
இந்த போராட்டத்தில் கிராம மக்களுடன், தேமுதிக மாவட்ட துணைச் செயலர் தங்க ஜெயபாலன் உள்ளிட்ட தேமுதிக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு டாஸ்மாக் சாராயக் கடையை மூடக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.