என் சாவுக்கு காரணமான ஆசிரியரை எதுவும் செய்ய வேண்டாம் - தனியார் பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...

First Published Mar 3, 2018, 8:47 AM IST
Highlights
Do not do anything teacher responsible for my death - private school student wrote a letter and committed suicide ...


திருப்பூர்

திருப்பூரில், "என் சாவுக்கு காரணமான ஆசிரியரை தொல்லை செய்யக் கூடாது" என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்த கொண்டான்.

திருப்பூர் மாவட்டம், கே.செட்டிப்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சிறிய அளவிலான பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தங்கம்மாள். இவர்களுக்கு விவேகானந்தன் (13) என்ற மகன் இருந்தான். இவன் திருப்பூர் - தாராபுரம் சாலை கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் விவேகானந்தன் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை. இதனையடுத்து கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட விவேகானந்தன் நீண்டநேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

பெற்றோர்கள் வந்து கதவை தட்டியும் கதவு திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது விவேகானந்தன் தூக்கில் பிணமாக தொங்கினான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவேகானந்தனின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவேகானந்ததின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மாணவன் விவேகானந்தன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை காவலாளர்கள் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் “என் சாவுக்கு ஆசிரியர் ஒருவர்தான் காரணம் என்றும், ஆனாலும் அந்த ஆசிரியரை தொல்லை செய்யக் கூடாது. என்னை பற்றி ஆசிரியர் எனது தந்தையிடம் பேச முயன்றபோதே நான் இந்த முடிவை எடுத்தேன்” என்று உருக்கமாக எழுதி இருந்தான்.

இதனையடுத்து மாணவனின் பெற்றோர் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் மாணவன் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், "பள்ளியின் மதிய இடைவேளையின்போது சாப்பிட செல்லும் விவேகானந்தன், அதன்பின்னர் தொடங்கும் வகுப்புக்கு தாமதமாக 9-வது நபராக வந்ததாராம். இப்படி தொடர்ந்து வகுப்பு தாமதமாக வந்ததால், அந்த பள்ளியின் ஒரு பாடப்பிரிவின் ஆசிரியர் உள்பட சக மாணவர்கள் விவேகானந்தனை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் மதியம் விவேகானந்தன், வகுப்புக்கு தாமதமாக வந்துள்ளான். இதனால் அப்போது வகுப்புக்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர் மற்றும் அந்த வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள், விவேகானந்தனை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவன், எதுவும் பேசாமல் வகுப்பில் இருந்துள்ளான். அதன்பின்னர் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான்" என்பது தெரியவந்துள்ளது.

click me!