
திமுகவின் மூத்த அமைச்சர் பொன்முடி. திமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு சைவ வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அருவருத்தக்க வகையில் பேசியது கடும் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொன்முடியின் பேச்சை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக எம்பி கனிமொழியும் தெரிவித்து இருந்தார்.
கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பொன்முடி பொறுப்பு வகித்த துணை பொதுச்செயலாளர் பதவியை மு.க.ஸ்டாலின் அதிரடியாக பறித்தார். இதன்பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பொன்முடி, தான் பேசிய பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில், பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பதவி இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில், பெண்களை இழிவுப்படுத்திய பொன்முடிக்கு திமுக பதவியை பரிசளித்து அழகுபடுத்தியுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள இந்த சமயத்தில், பெண்களை மிகவும் கொச்சையாக, ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை Award-ஆக வழங்கி, அழகு பார்த்துள்ளது திமுக.
திமுகவின் கண்துடைப்பு நாடகம்
ஆபாசமாக, அவதூறாக, இன ரீதியாக இழிவுபடுத்தி பேசினால் பெயருக்கு ஒரு நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்கள் சேர்த்து மீண்டும் அதே பதவி வழங்கப்படுவதே திமுக-வின் Formula! பள்ளி, கல்லூரி, ஏர்போர்ட் வரை எந்த பக்கமும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டின் ஆட்சியைத் தள்ளிய கட்சியான திமுக, இந்த நியமனத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களுக்கு சொல்லவரும் செய்தி ஒன்று தான்:
திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.