
திமுக விவசாய அணி துணை அமைப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர் பிரபாவதி. இவரது கணவர் திருமலை(52). இவர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சரமாரியாக வெட்டி படுகொலை
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமலை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியது.
தனிப்படைகள் அமைப்பு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தூசி போலீசார் திருமலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக கொலை
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிக்கலாம் என தெரியவந்துள்ளது. அதாவது கொலையான திருமலைக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த ராஜாராம்(37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ராஜாராம், தனது கூட்டாளிகளுடன் திருமலையை கடத்திச் சென்று, அடித்து உதைத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த வழக்கில் ராஜாராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் ராஜாராம் வெளியே வந்த நிலையில் இந்த கொலை நடைபெற்றுள்ளதால் அவருக்கு தொடர்பு இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.