தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவதை பொழப்பாக வைத்திருக்கும் திமுக: அண்ணாமலை!

Published : Jan 06, 2025, 07:19 PM ISTUpdated : Jan 06, 2025, 09:36 PM IST
தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவதை பொழப்பாக வைத்திருக்கும் திமுக: அண்ணாமலை!

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் வெளியேறினார். இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். பின்னர் சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.  தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமதிக்கப்படுவதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு  செய்ததாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினை அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. இன்று, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதையும் படிங்க: அமைச்சருடன் செல்லும் அளவுக்கு ஞானசேகரன் அவ்வளவு நெருக்கமா? அடுத்தடுத்து ஆதாரம்! விடாத அண்ணாமலை!

1. கடந்த நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை அவர்கள் எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

2. இருப்பினும், 1991 ஆம் ஆண்டு வரை, தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

3. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம், செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

4. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், ஆளுநர்/ துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். 

இந்த உத்தரவு, 1971 ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! ஒரே ட்வீட் போட்டு ஆளுநரையும், திமுகவையும் சீண்டிய விஜய்!

ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு
இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!