திமுக, அதிமுக ஒருவிதமான சரிவை சந்தித்து வருகின்றன - வைகோ பரபரப்பு பேச்சு

First Published Dec 26, 2016, 11:33 AM IST
Highlights


தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் இயக்க கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெற்றது. இதில், திராவிடர் 100 என்ற நூறு புத்தகங்களை வெளியிட்டு வைகோ பேசியதாவது:-

திமுக, அதிமுக ஒருவிதமான சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், திராவிட இயக்கங்கள் நீர்த்துப்போய் விட்டதாக ஒரு சிலர் பகல் கனவு காணுகின்றனர். ஆனால், திராவிடத்துக்கு அழிவு கிடையாது.

எண்ணற்ற பேர் தங்களது உயிரைத் தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தனர். அவர்களின் வீரம், தியாகங்களைப் பதிவு செய்ய சிலர் விட்டுவிட்டனர்.

அதே வேளையில், மராட்டியத்தில் அரபிக் கடலில் வீர சிவாஜிக்கு ரூ.3,600 கோடி செலவில் அந்த மாநில அரசு சிலை நிறுவ உள்ளது. அதற்காக அவர்களை நான் குறை கூறவில்லை. ஆனால், தமிழகத்தின் கடந்த கால வரலாறுகளையும், நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் பதிவு செய்வது நமது கடமையாகும்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்ற மும்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கிறது. இது நம் மொழி, பண்பாடுகளை அழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியாகும்.
தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாகவும், நீதி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் ஆக்க வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் பாராட்டுகிறேன்.

திராவிட இயக்கங்கள் ஒருங்கிணைந்து இலங்கையில் தமிழ் ஈழம் அமைய பாடுபடவேண்டும். அங்கு ஈழம் அமைவதைப் பார்த்து விட்டுத்தான் என் கண்கள் மூடும் என்றார்.

click me!