
டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் தொடுத்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்ற பிறபித்த உத்தரவில், டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வதற்கு மட்டும்தான் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. பார்களை திறப்பதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை.அதாவது, இதுபோன்ற பார்களை ஏலம் விட்டு, பார்களை திறந்து பொது இடத்தில் மக்களை மது அருந்த அனுமதிப்பதற்கு அதிகாரம் இல்லை.
எனவே, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை. பார் குத்தகை வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 14- தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட குத்தகையை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பெரும்பாலானோர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரிழித்து வருகின்றனர். மதுபோதைக்கு அடியானவர்களின் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி வருகின்றன. மதுவால் இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்கள் பலர் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறும் பல குற்றச் சம்பவங்களுக்கு மதுதான் காரணமாக அமைகின்றன. மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பணத் தேவைக்காக, செயின் பறிப்பது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தையே வீணடித்துக் கொள்கின்றனர்.
மதுக்கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், பள்ளிச் சீருடை அணிந்து மதுக்கடைகளில் மது பாட்டில்களை வாங்கும் மாணவர்களின் புகைப்படங்கள், போதையில் கலாட்டாவில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதோடு, சாலை விபத்துகள் அதிகரிப்புக்கும் மதுதான் மூலகாரணமாக உள்ளது.
இவ்வாறு தமிழகமே மதுவால் சீரழிந்து வரும் நிலையில், டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது வெறும் அறிவிப்பாக இல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து பார்கள் மூடும் வரை உயர் நீதிமன்றம் உறுதியாக இருக்க வேண்டும். டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட்டது போல் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.