
மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்கிறது.மேலும், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, 10 , 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 4 ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண் விவரங்களை, ஏப்.19-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. செய்முறைத் தேர்வுகள்
ஏப்.25 முதல் மே 2-ஆம் தேதிக்குள் நடத்தப்படவுள்ளன. அதற்குமுன் மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை பதிவுசெய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்களின் வெற்று மதிப்பெண் பட்டியல்களை ஏப்.7 முதல் 9-ஆம் தேதிக்குள் தேர்வுத் துறை இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் தலைமையாசிரியர்கள் மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண்களை பூர்த்தி செய்து, அதன் விவரங்களை ஏப்.12 முதல் 19-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். அதன்பின் அதற்கான மதிப்பெண் பட்டியலை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மே 21- ஆம் தேதிக்குள் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அறிக்கையை முதன்மைக் கல்வி அதிகாரிகள் மே 23-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.