'காலா' குடை சண்டை என் தந்தையைப் பார்த்துதான் எடுத்தார்கள்...! பா.ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய நிஜ காலா வாரிசு!

First Published Jun 10, 2018, 1:22 PM IST
Highlights
Diraviyam Son Jawahar sent a notice to Director Pa.Ranjith


காலா, கற்பனை கதை என்று கூறப்பட்டு வந்தாலும் படம் வெளியான பிறகு எந்தவித நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுப்போம் என்று உண்மையான காலாவின் மகன் ஜவகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். திரவியத்தின் வாழ்க்கையில் இருந்து பல விஷயங்கள் படமாக்கப்பட்டு, ஒரு இடத்தில் கூட அவரது பெயர் குறிப்பிடாதது மோசமான செயல் என்று அவரது மகன் ஜவகர் கூறியுள்ளார். இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், பட நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே, மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடாரின் மகள் விஜயலட்சுமி, இது என் தந்தையின் கதை என்றும் எங்கள் அனுமதியில்லாமல் எடுக்கிறீர்கள் என்றும் கூறியிருந்தார்.

காலா படம் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், திரவியம் நாடாரின் மகன் ஜவகர், காலா படத்தில் இடம் பெற்றுள்ள பல விஷயங்கள் எங்கள் தந்தையின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், அவரது பெயரை எங்கும் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் வொண்டர்பார் நிறுவனம் மீதும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனது தந்தை திரவியம் நாடாரின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டதாக சில விஷயங்களை அந்த நோட்டீசில் ஜவகர் குறிப்பிட்டுள்ளார். அதில், காலா சேட் என்ற பெயரே தன் தந்தை திரவிய நாடாரின் நிறத்தை வைத்து மும்பைக்காரர்கள் அவரை அன்பாக அழைத்த பெயர் என்றும், அவர் வெல்லம் விற்கும் தொழில் செய்ததால் கூடுவாலா சேட் என்றும் அழைக்கப்பட்டார்.

காலா படத்தில் காட்டப்படும் காமராஜர் நினைவு பள்ளி, தனது தந்தையால் 1960-களில் கட்டப்பட்ட பள்ளி என்றும் அந்த பள்ளியைப் படத்தில் வைத்தவர்கள் அவரது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ரஜினிகாந்த் அணியும் உடை பாணியும் தனது தந்தையைப் போன்று இருக்கிறது, ஒரே ஒரு வித்தியாசம் அவர் எப்பொழுதும் வெள்ளை நிறம் அணிந்திருப்பார்.

திரவியம் நாடார் எப்போதும் குடையுடன்தான் இருப்பார். வெயில் என்றாலும், மழை என்றாலும் அவர் கையில் குடை இருக்கும். காலாவிடம் தாராவியே அடங்கி இருந்தாலும், அவர் தன் மனைவியிடம் அடங்கிப் போவது போல காட்சி உள்ளது. 

இப்படி அவரது வாழ்க்கையில் இருந்து இத்தனை விஷயங்கள் எடுத்து படமாக்கிவிட்டு, அவரது பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் இருப்பது மோசமான செயல். எங்களுக்கு பணம் தேவையில்லை. ஆனால், ரஞ்சித் தாராவியில் வந்து அங்குள்ளவர்களிடம் விசாரித்து, ஆராய்ந்துதான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு என் தந்தை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று ஜவகர் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

click me!