பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்… கையாள்வது எப்படி? போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Jan 10, 2022, 7:02 PM IST
Highlights

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு உணர்ச்சிகரமான நிலையில் உள்ளவர்களை முழு ஈடுபாட்டுடன் புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு உணர்ச்சிகரமான நிலையில் உள்ளவர்களை முழு ஈடுபாட்டுடன் புலன் விசாரணை செய்யும் முறையினை எளிதாக்குவதற்கு தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், 1098 குழந்தைகளுக்கான புகார் தெரிவிக்க உருவாக்கப்பட்ட உதவி எண் மூலமாக பெறப்படும் புகார், 181 பெண்களுக்கான வீட்டில் அல்லது பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட உதவி எண் மூலமாக பெறப்படும் புகார், 100 தமிழக காவல் துறையில் புகார் தெரிவிக்க உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் மூலமாக பெறப்படும் புகார், பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக வாய்மொழியாக அல்லது எழுத்துபூர்வமாக  பெறப்படும் புகார், தமிழக அரசால் சமூக நல பாதுகாப்புத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையம் மூலமாக பெறப்படும் புகார், வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சமூக நல பாதுகாப்பு துறையின் மூலம் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையம் மூலமாக மனநல ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குழந்தையின் சொந்தங்கள், உறவினர்களால் பாலியல் குற்றங்கள் நடந்தால், உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களால் குழந்தைக்கு பாலியல் தொல்லை நடந்திருக்குமெனில் அந்த குழந்தையை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக விசாரணை அதிகாரி பாதுகாப்பாக மீட்க வேண்டும், இவ்வாறாக குற்றங்களில் காவல் துறையின் உடனடித் தலையீட தேவைப்படும் பட்சத்தில் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து ஒரு பெண் காவல்துறை அதிகாரி உடனடியாக செல்ல வேண்டும்.

புகார் பெற்றவுடன் விசாரணை அதிகாரி உடனடியாக 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவரை மீட்டு அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி இருந்தால் தேவைப்பட்டால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கான வழிமுறைகளை தாமதிக்காமல் செய்திடல் வேண்டும், பெற்றோர், பாதுகாவலர் அல்லது புகார்தாரர் ஏற்கெனவே காவல் நிலையத்தில் இருந்தால், அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக புகார் பெறப்பட வேண்டும், புகாரை பெற்ற பிறகு வழக்கின் விவரங்கள் சமுதாயப் பணி பதிவேட்டில் (சிஎஸ்ஆர்) நிரப்பப்பட்டு, அதன் நகலை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், குழந்தைக்கு பாதுகாப்பான வசதியான இடத்தில் புகார் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், விசாரிக்கப்பட வேண்டிய இடமானது காவல் நிலையத்தில் இருந்து வெளியில் இருந்தால் குழந்தையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இடம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது சந்தேக நபரோ அல்லது சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்களோ இருக்க கூடாது, அனைத்து மகளிர் காவல்  நிலையத்தின் புலன் விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட குழந்தையை அவரது வீட்டில் விசாரணை செய்து அறிக்கை பதிவு செய்ய செல்லும் சமயத்தில் வாகனத்தின் சைரனை பயன்படுத்த கூடாது. குழந்தையுடன் பழகும் போது அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்க வேண்டும்.

புலன் விசாரணை அதிகாரிகள் பெற்றோர், பாதுகாவலர் அல்லது குழந்தையுடன் கலந்துரையாடும் போது ஆலோசகர்கள் உடனிருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரைவில் அழைத்து செல்ல வேண்டும். பாலியல் வன்கொடுமை மாதிரிகள் முடிந்த வரை விரைவில் மற்றும் 5 நாட்களுக்குள் சேகரிக்கப்பட வேண்டும். வன்கொடுமைக்கு பிறகு பாதிக்கப்பட்டவருக்கு நடந்த நடவடிக்கை தொடர்பாக சான்றுகள் சேகரிக்கப்பட வேண்டும். ஆலோசகர் முன்னிலையில் இறுதி செய்வதற்கு முன் முதல் தகவல் அறிக்கையை பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது புகார்தாரர்களிடம் படிக்கப்பட வேண்டும். குற்றத்தை பற்றிய தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒரு முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது புகார்தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சந்தேக நபர், குற்றவாளி கைது செய்யப்படும் போது, அவரது வாக்குமூலத்தை முறையாக பதிவு செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று தடயவியல் டிஎன்ஏ சான்றுகள் மாதிரி சேகரித்து பின்பு முறையாக உரிய நேரத்தில் போலீஸ் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரிவு 5 அல்லது 6ன் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிக்கான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆதரவு மேற்கொள்ளப்பட வேண்டியதால் பாதிக்கப்பட்டவரின்  பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் சாட்சியின் தொடர்பு விபரங்கள் புலன் விசாரணை அதிகாரி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு வழக்கில் விசாரணை அதிகாரிகளான போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

click me!