புதுக்கோட்டை
ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டக் குழுவினர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை அகற்றி நிலத்தினை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.புஷ்பராஜ் தலைமைத் தாங்கினார். இதில், அப்பகுதி மக்கள், விவசாயிகள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆலங்குடி எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:
"நெடுவாசல் திட்டத்தை ரத்து வலியுறுத்தி விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் சார்பில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளால் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி.புஷ்பராஜ் பேசியது:
"கடந்த ஆண்டைப்போல இந்தாண்டிலும் போராட்டத்தின் வாயிலாக இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுப்போம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்யாவிட்டால் ஏப்ரல் 12-ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை முன்னாள் உறுப்பினர் ராஜா.பரமசிவம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.சி.சாமிநாதன், இந்திய கம்யூ. கட்சியின் மாவட்ட செயலாளர் த.செங்கோடன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஆர்.திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.