திருவள்ளூர்
பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அடிபணிந்து நிறைவேற்றிய தற்போதைய பட்ஜெட்டை கண்டிப்பது உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு செயல்களைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் இரயில் நிலையம் அருகே மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முகமதுமீரா, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் துரைபாஸ்கர், கே.கஜேந்திரன், பாலாஜி, அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயபால், விஜயன், திருநாவுக்கரசு, குணசேகரன் , துரைசாமி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
அப்போது அவர்கள், "பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அடிபணிந்து நிறைவேற்றிய தற்போதைய பட்ஜெட்டை கண்டிப்பது,
இராணுவ தளவாடங்களை தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அரசு வங்கிகளை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதை கைவிட வேண்டும்,
இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக நடத்த வேண்டும்,
வருங்கால வைப்புநிதிக்கு கூடுதல் வட்டியை கொடுக்க வாய்ப்பிருந்தும் மத்திய அரசு வட்டியை குறைப்பதை கண்டிப்பது,
மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர்களான லெனின், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்கும் பா.ஜ.க.வினரை கண்டிப்பது" போன்றவற்றில் தங்களது கண்டனங்களை பதிவு செய்ய இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கையில் கருப்பு கொடியேந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.