
ஈரோடு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தினர் மௌன ஊர்வலம் சென்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை அலங்காரியூரில் ஜனநாயக மக்கள் உரிமை கழகம் சார்பில் நேற்று மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த மௌன ஊர்வலத்திற்கு ஜனநாயக மக்கள் உரிமை கழக கிளை செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட தலைவர் கேசவன் பங்கேற்று மௌன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் அலங்காரியூரில் இருந்து தொடங்கி சென்டாபுதூர் வழியாக சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வரை சென்றது.
இந்த ஊர்வலத்தில் சென்றவர்கள், மத்திய அரசை கண்டிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
இதில், துணை செயலாளர் பிரகாஷ், துணை தலைவர் பெருமாள் உள்பட திரளானோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலத்தையொட்டி அம்மாபேட்டை காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.