ஏர்செல் அலுவலகத்தை படையெடுத்த வாடிக்கையாளர்கள்; விளக்கம் கேட்டு முற்றுகை...

First Published Feb 23, 2018, 8:03 AM IST
Highlights
Customers invading Aircel office Siege to listen to the explanation ...


ஈரோடு

செல்போன் சேவை முடங்கியதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகத்தை தொடர்ந்து படையெடுத்த வண்ணம் உள்ளனர். அலுவலகத்திற்கு நாள் முழுவதும் காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தமிழகம் முழுவதும் ஏர்செல் செல்போன் சேவை கடந்த சில நாள்களாக முடக்கப்பட்டதால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, ஏர்செல் அலுவலகத்தை படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம், மேட்டூர் சாலையில் உள்ள ஏர்செல் அலுவலகம் நேற்று அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டனர். இதனையடுத்து மேட்டூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு நகர காவல் ஆய்வாளர் விஜயன் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, வாடிக்கையாளர்கள், “ஏர்செல் நிறுவனம் தனது சேவையை உடனடியாக நிறுத்தி உள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக புகார் தெரிவிக்க வந்தால் அலுவலகமும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு உரிய விளக்கம் கிடைக்காமல் தவிக்கிறோம்”என்று ஆதங்கப்பட்டனர்.

அதற்கு காவலாளர்கள், “தமிழகம் முழுவதும் பிரச்சனை உள்ளது. எனவே, உங்களுடைய புகாரை ஏர்செல் நிறுவனத்திற்கு அனுப்பி வையுங்கள்” என்று வாடிக்கையாளர்களை சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனாலும், வாடிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததால் அங்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

tags
click me!