
இந்தியா முழுவதும் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவல் குறித்த தற்போதைய நிலை மற்றும் அரசின் தயார்நிலைப் பற்றி விளக்கினார்.
புதிய கொரோனா வீரியம் இல்லாதது: கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் பெற்று வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பரவி வரும் தொற்று வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது என்பதால், பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. மத்திய சுகாதார அமைச்சகமும் பதற்றம் அடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: ஒமைக்ரான் வகையிலான கொரோனாவால் யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை. தவறான தகவல்களைப் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் தற்போது 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 17 மாதிரிகள் புனே ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. எனவே, பொதுமக்கள் கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம்.
தடுப்பு நடவடிக்கைகள்: கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவை அவசியம். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, ஆனால் அணிந்தால் நல்லது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
பெண் குழந்தைகள்:
கொரோனா நிலவரம் குறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதையும் சுட்டிக்காட்டினார். முன்பு 1,000 ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், தற்போது இந்த விகிதம் 940 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.