Omicron : ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்தவர்களின் கொரோனா பாதிப்பு 4 ஆக உயர்வு… மா.சுப்ரமணியன் அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Dec 4, 2021, 3:04 PM IST
Highlights

ஒமைக்ரான் ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு ஏற்கனவே கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

ஒமைக்ரான் ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு ஏற்கனவே கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

மேலும் சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 2 பேர், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதை அடுத்து கொரோனா பாதித்த 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள், மரபியல் பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் 4 முதல் 5 நாட்களில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஒமைக்ரான் ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்தவர்களின் தொற்று பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.  பூஸ்டர் டோஸ் குறித்து மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசு செயல்படுத்தும்.  தொற்று பாதித்த மூன்று பேருக்கும் டெல்டா வகை வைரஸ் ஆக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அபாய நாடுகளிலிருந்து வந்தவர்களின் தொற்று பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.  ஒமிக்ரான் கண்டறியப்பட்டால் உடனே சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

click me!