
திருவாரூர்
ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹஜ் மானியத்தை வழங்கவும் வலியுறுத்தினர்.
இசுலாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனைக் கண்டித்து நகர காங்கிரசு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத் தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார். நகரத் தலைவர்கள் சாம்பசிவம் (கூத்தாநல்லூர்), மடப்புரம் சம்பத் (திருவாரூர்), மாவட்ட இளைஞர் காங்கிரசு தலைவர் ராஜா, மாவட்ட சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் சமீர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சிகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்! ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கின்றோம்! என்றும் வழங்க வேண்டும்! வழங்க வேண்டும்! ஹஜ் மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும்! என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சிறுபான்மைத்துறை ஒருங்கிணைப்பாளர் பாவாமைதீன், வக்கீல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் பதுருதீன்காந்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குவளைக்காரர்அலீம், மாவட்ட பொருளாளர் சகாபுதீன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு துணைத் தலைவர் இளையராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ரகமத்துல்லா வரவேற்றார். முடிவில் நகர துணைத் தலைவர் சக்திவேல் நன்றித் தெரிவித்தார்.