
சீமை கருவேல மரங்கள் அகற்றாத இராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் சீமை கருவேல மரங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, பல்வேறு மாவட்டங்களிலும் அரசுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆட்சியர்கள் மேற்கொண்டனர்.
தனியார் நில உரிமையாளர்கள் சீமை கருவேல மரங்களை தாங்களாகவே அகற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டனர்.
இருந்தபோதிலும், தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் இருக்கும் மரங்களை அகற்ற அவர்கள் முன்வரவில்லை. சில மாவட்டங்களில் ஆட்சியர்கள், தனியாரை எச்சரித்து கருவேல மரங்களை அகற்றினர்.
இந்தநிலையில் இராமநாதபுரம் ஆட்சியர் மீது சீமைக் கருவேல மரங்களை அகற்றவில்லை என்றும் அவர் மீது நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்றும் வழக்கு தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.