தூத்துக்குடியில், தோட்டத்தில் இருந்த காய்ந்த புல்லில் தீப்பற்றி அதிவேகமாக பரவியதால் தென்னை, பனை மற்றும் கருவேல மரங்கள் கருகி சேதமாயின.
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயலை அடுத்த மஞ்சள்நீர்காயலில் கார்த்தீசன், சங்கரசுப்பு, விஜயமூர்த்தி, வேல்முருகன் ஆகியோருக்கு சொந்தமானத் தோட்டங்கள் உள்ளன.
இவர்களது தோட்டங்களில் தென்னை, பனை, சீமை கருவேல மரங்கள் அதிகளவில் இருந்தன. கடந்தாண்டு பருவமழைப் பொய்த்ததால் தென்னை, பனை மரங்கள் தண்ணீரின்றி வாடியதோடு அங்குள்ள புற்களும் காய்ந்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தோட்டங்களில் உள்ள காய்ந்த புற்களில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் நான்கு புறமும் தீ அதிவேகமாக பரவியது. இதில் வாடிய நிலையில் நின்ற தென்னை, பனை மரங்களும் உடனே தீப்பிடித்து எரியத் தொடங்கின. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்துச் சென்று, தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி , ஸ்பிக்நகர், தெர்மல்நகர், பழையகாயல் ஜிர்கோனியம் தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். ஆனால், நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் 300 பனை மரங்கள், 150 தென்னை மரங்கள், மற்றும் ஏராளமான கருவேல மரங்கள் தீயில் எரிந்து கருகி சேதமாயின. இதன் மதிப்பு சுமார் ரூ.10 இலட்சம் இருக்கும் என கணிக்கப்பட்டது.
திருவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் தனலட்சுமி, சதீஷ், சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் சிவசண்முகம் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.