56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

By Narendran SFirst Published Jan 7, 2022, 9:24 PM IST
Highlights

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து டிசம்பர் 20 ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற இரு விசைப் படகையும், 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று 12 மீனவர்களையும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விடுதலை செய்து, படகுகளை மீட்க ஜனவரி 28 ஆம் தேதிக்குள் படகு உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் இரு படகுகளும் அரசுடமையாக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், டிசம்பர் 19 ஆம் தேதி கைதாகி, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரையும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்காமல் உள்ளதால், மீனவர்களின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தியும் இன்று கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக ஒன்றிய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்டெடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார். வரவிருக்கிற பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் வாடும் 56 மீனவர்களை விடுவித்து, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதை உறுதி செய்திடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதற்குரிய உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடவேண்டும் எனவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!