
சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கோரி கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் கோவை மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோயம்புத்தூர் நகருக்கு தண்ணீர் வழங்க வேண்டிய முக்கிய நீர் ஆதாரமாக சிறுவாணி ஆணை உள்ளது. தற்போது கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு மொத்த நீர் தேவை 265 மில்லியன் லிட்டர், இதில் 101.40 மில்லியன் லிட்டர் குடிநீர் சிறுவாணி அணையை ஆதாரமாக கொண்டிருக்கிறது.
சிறுவாணி அணையில் இருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி. நீர் வரை ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை குடிநீர் வழங்கும் வகையில் தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் கேரள அரசு 0.484 டி.எம்.சி.யில் இருந்து 1.128 டி.எம்.சி. வரையிலான தண்ணீரையே வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்த நிலையிலும் கேரளா நீர்பாசனத்துறை முழு நீர் தேக்க மட்டத்திற்கு பதிலாக, இருப்பு நிலையை குறைத்து பராமரித்து வருவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு கொண்டுவந்தேன்.
அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்ட அளவினை விட குறைந்த அளவில் தான் தண்ணீரை வழங்க முடிகிறது. இதேபோல் கேரள நீர் பாசனத்துறை கடந்த மாதம் 3 ஆம் தேதி நீர் வரக்கூடிய லெவல் 4 என்ற பாதையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சூழலில், கேரளா அரசின் மறுஉத்தரவு வரும் வரை இந்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாது என்று கேரள நீர் பாசனத்துறை தெரிவித்துள்ளதாக தனது கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.