
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (14.11.2022) வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும், வெள்ளத்தால் சூழப்பட்ட விளைநிலங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு:
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 58 முகாம்கள் தொடங்கப்பட்டு, 13,307 குடும்பங்களைச் சேர்ந்த 32,972 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட்டுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், 68 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க..கணவருடன் இருக்க முடியல.. பிரியங்கா காந்தி சொன்னது இதுதான் - கண் கலங்கிய நளினி !
மயிலாடுதுறை மாவட்டம்:
இன்று, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பச்சைபெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு சென்று பார்வையிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். மேலும், இம்முகாமில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிட மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு, உணவின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.
இம்முகாமில் தற்போது சுமார் 300 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேநீர், பிஸ்கட், பிரட் போன்ற உணவுப் பொருட்களை வழங்கினார். பச்சைபெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க..2 கோடிக்கு கிராமம் விற்பனை.! நல்ல ஆஃபர் யார் வேணாலும் வாங்கலாம் !! இவ்வளவு வசதிகள் இருக்கா ?
கனமழை பாதிப்பு:
இம்மருத்துவ முகாமில் தற்போது 125 நபர்கள் உள்நோயாளியாகவும், தினமும் 60 நபர்கள் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதை பார்வையிட்டார். உமையாள்பதி காலனியில் மழை நீரால் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும், சேதமடைந்த வீடுகளையும் முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் விபரங்கள் கேட்டறிந்தார்.
பின்னர், உமையாள்பதி கிராமத்தில் 221 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.
நிவாரண உதவி:
மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சீர்காழி பேருந்து நிலையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள், சேலை, போர்வை, பாய் போன்ற நிவாரணப் பொருட்களை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்